திங்கள், 24 ஆகஸ்ட், 2015

முகநூலில் முகிழ்க்கும் விவசாயம்

    வாழ்க்கை முறையாகிறது  
         மீண்டும்  விவசாயம்
       (நுகர்வோர் எக்ஸ்பிரஸ் வார இதழில் வெளியான கட்டுரை)

     "எருக்கலை, சணப்பைக்கு அடுத்து மிகச்சிறந்த தழை உரம் கொழிஞ்சி. கொழிஞ்சியில் மணிச்சத்து மிகஅதிகம். கொழிஞ்சியை மடக்கி உழவு செய்யாமல் விட்டு விட்டால், அது உழவில்லா வேளாண்மைகொழிஞ்சியின் அருமையை உணர்த்தியதற்கு நன்றி"
    "விதை உண்டாகும் முன்னரே சாரணைக் களையை மடக் உழவு செய்ய வேண்டும். இல்லையேல் பேய்த்தனமாக பரவிவிடும், கால்நடைகளுக்கும் உதவாது. சாரணைக் களையை லேசாக நினைத்து ஏமாந்து விடாதீர்கள்"  
   "கொழிஞ்சி விதைகளை நிலத்தில் கொட்டினால் போதும். மழையில் முளைத்து, தோட்டம் முழுவதும் நிரம்பி விடும். சிறந்த மூடக்காக செயல்படும். தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. கொழிஞ்சி, பசுந்தாள் உரம் மாட்டும் அல்ல அது காற்றில் உள்ள தழைச்சத்தை, மண்ணில் நிலை நிறுத்தி வைக்கிறது"
  "இப்போது கொழிஞ்சியின் இடத்தை பார்தீனியம் பறித்து கொண்டது துரதிருஷ்டம். வளர்க்க வேண்டியவை அழிக்கப்பட்டு, அழிக்க வேண்டியவை வளர்க்க பட்டுவிட்டது, கடந்தகால விவசாயத்தின் பரிதாபம். பல அர்த்தம் சொல்கிறது இந்த வரிகள். உங்கள் பதிவுகள் என்னை வேளாண் பண்ணைக்கே அழைக்கிறது"
   "கத்திரி நடவுசெய்துள்ளேன். தொழுஉரம் (மாட்டு சாணம்) அதிகமாக இட்டிருக்கிறேன் இதனால் வேர்ப்புழு வரும் என்று நண்பர் கூறினார். அப்படி வரும? வந்தால் இயற்கை முறையில் எப்படி சரி செய்வது" இது கேள்வி. அடுத்த பதிவு "வேப்பம் பிண்ணாக்கு போடச் சொல்லி நண்பர் வழிகாட்டினார்
     "10 லிட்டர் தண்ணீரில் 5 கிலோ கல்லுப்பு (சமையல் உப்பு ) கலந்து பார்த்தீனியம் செடியில் பூ பிடித்த பின் தெளியுங்கள். விதை, செடி அனைத்தும் வீரியம் அற்று அழிந்து போகும். தயவு செய்து ரசாயன களைக் கொல்லிகள் வேண்டாம்".
    "விவசாயி தனது நேரடி அனுபவத்தைச் சொல்லும்போது உண்மையான
வேளாண் கல்லூரி பாடப் புத்தகம் போல் உள்ளது. ஆனால் இவ்வளவு
அனுபவக் கல்வியை விட்டு விட்டு வேளாண் அலுவலர்களின் செயற்கைத்
தனமான இரசாயன உரக் கல்வி, இவ்வளவு காலமும் கோலோச்சியதுதான்
தமிழக வேளாண்மையை பின்னுக்குத் தள்ளியதுடன், வேளாண்மை குறித்து
இளைஞர்களின் அவநம்பிக்கைக்கும் காரணமாகி விட்டது"

   மேற்காணும் விளக்கங்கள் எல்லாம் வேளாண் துறையின் களப்பணியில் நிகழ்ந்த விவாதங்கள் அல்ல. முகநூல் பதிவுகள்தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் விவாதங்கள். சத்திய மங்கலத்தைச் சேர்ந்த விவசாயி திருமூர்த்தி, கொளுஞ்சிச் செடியின் வேளாண் மகத்துவம் பற்றி வெளியிட்ட முகநூல் பதிவுகளின் பட்டியல். அது நீண்டுகொண்டே செல்கிறது பல நாள்களுக்கு
    சுமார் 680 பேர் இப்பதிவுக்கு "லைக்".... 200க்கும் மேற்பட்டோர் "ஷேர்"... நூற்றுக் கணக்கானோர் "கமண்ட்" செய்து உள்ளனர். இதுபோல் பல விசாயிகளின் சொந்த அனுபவங்கள், முகநூல் வாயிலாக வேளாண் ஆர்வலர்களிடம் வேகமாகப் பரவிவருகிறது. வேளாண் துறையின் எப்பதிவும் இந்த அளவுக்கு விவாதத்துக்கு வந்தது இல்லை என்கிறார்கள் விவசாயிகள்
   முகநூல் பதிவு விவசாயி திருமூர்த்தி ஒன்றும் கற்றறிந்த வேளாண் அலுவலர் அல்ல. பள்ளிப் படிப்புடன் நின்ற உண்மையான விவசாயிஅவர்போல் பல உண்மை விவசாயிகள் இன்று பெருமளவில் உதயமாகி இருக்கிறார்கள். மென்பொருள் நிறுவனங்களில் பணியாற்றி லட்சக் கணக்கில் சம்பாதித்த இளைஞர்கள் பலர், மன அழுத்தம் நிறைந்தவர்களாக மாறி, அந்த வேலையை உதறித் தள்ளி, வேளாண்மைக்குத் திரும்பி இருப்பது விவசாயத்தில் ஒரு மறுமலர்ச்சியை பிரதிபலிக்கிறது. "தேசிய நெடுஞ்சாலை ஓரம் ரூ. 20 கோடி மதிப்பிலான நிலம் வைத்து இருக்கிறேன். வீட்டுமனைக்கு நிச்சயம் கொடுக்க மாட்டேன் விவசாயம்தான் செய்வேன்" என்கிறார் மற்றொரு விவசாயி.
   அவர்கள் பழைமை கழைந்து, துணிந்து இயற்கை விவசாயத்தில் இறங்கி, பல வெற்றிகளைாக் குவித்து இருக்கிறார்கள். இன்றைய இளம் விவசாயிகளின்  வெற்றிக் கதைகளை, அதிநவீன வெகுஜன சமூக வலைத் தளமான முகநூல் மூலம் பகிர்ந்தளித்துக் கொண்டு இருப்பது மிகவும் ஆச்சரியமாகவும், இதுவரை வேளாண் துறையால் சாதிக்க முடியாத வேளாண் கல்வியாகவும் நீண்டு கொண்டே செல்கிறது.
   நவீன வேளாண்மையை கற்றுத் துறைபோகிய மூத்த வேளாண் அலுவலர் ஒருவர் வேளாண்மை குறித்து ஏதேனும் விளக்கம் அளிக்கத் தொடங்கினால் விவசாயிகள் செவிமடுக்க தயாராக இல்லை. விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்திற்கு வரும் வேளாண் அலுவலர்கள், தனது விரிவுரைகளை நிகழ்த்த நினைக்கிறார்கள். ஏன் இங்கு வந்து பேசுகிறீர்கள் என்று ஆட்சியர்கள் கேட்டால், நாங்கள் பேசினால் விவசாயிகள் வரமாட்டேன் என்கிறார்கள். இங்குதான் அவர்கள் கூடியிருக்கிறார்கள், என்று விளக்கம் அளிக்கிறார் அந்த அதிகாரி.
   காரணம் அவரது விளக்கம் வெறும் செயற்கை ரசாயனத் தன்மை கொண்டதாக, நிலத்தையைும் உணவுப் பொருள்களையும் விஷமாக்கி, மேற்கத்திய வேளாண்மைக்கு அழைத்துச் செல்வதுமாக இருப்பதுதான்.
   ஆனால் திருமூர்த்தி மட்டுமல்ல அவர்போன்ற எண்ணற்ற விவசாயிகளின்  விளக்கங்கள், வேளாண்மையை இயற்கையோடு இயைந்த வாழ்க்கையாக, கேட்போரின் காதுகளை படிப்போரின் கண்களை வியப்படையச் செய்பவைகளாக உள்ளன. இத்தகைய விவசாயிகள் தரும் விளக்கங்கள் விவசாயத்துக்கே புத்துயிர் ஊட்டுவதாக அமைந்து இருக்கிறது.
   இந்த நீண்ட நெடிய முகநூல் பதிவுகள் அதைத்தான் பிரதிபலிக்கின்றன. கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் பயின்று வேளாண் அலுவலர்களாக வந்து இருப்போர், விவசாயிகளுக்கு வேளாண் உத்திகளை எடுத்துரைப்பது இருக்கட்டும். ஓராண்டாவது திருமூர்த்தி போன்ற நமது கிராமத்து விவசாயிகளுடன் இணைந்து அவர்களின் மனநிலையை, நமது பாரம்பரிய இயற்கை வேளாண் பணிகளை கொஞ்சம் புரிந்து கொண்டு, பின்னர் தங்கள் அலுவலகத்துக்குள் நுழைவது பொறுத்தமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
   கிராமத்து மிராசுதார் நகர்புறத்துக்கு நகர்ந்து, பங்களாவில் தங்கிவேலைக்காரரிடம் நாற்று நட்டாயா? களை பறித்தாயாஉரம் போட்டாயா? எப்போது அறுவடைக்குத் தயார் ஆகும்? என்று வினாக்களை எழுப்பி்க் கொண்டு, வேளாண்மையை உபதொழிலாக, பரம்பரையாக வந்த நிலத்தை வைத்துக்கொண்டு பொழுதுபோக்காக விவசாயம் செய்வோருக்குத்தான் விவசாயம் லாபமற்ற தொழில். அத்தகைய பழைமை வாதிகளால்தான் விவசாயம் கெட்டொழிந்தது எனலாம்.
   வெறும் 2 ஏக்கர் நிலத்தை வைத்துக் கொண்டு அதில் பாடுபட்டு, மகள்களுக்கு தலா 50 சவரன் நகை போட்டு, மகன்களை சிறந்த பொறியில் கல்லூரிகளில் படிக்க வைத்து முன்னேறிய குடும்பங்கள் பல உண்டு. இயற்கைச் சீற்றத்துக்கு இலக்காகாத பகுதிகளில் முறையாக விவசாயம் செய்வது இன்றும் லாபகரமான தொழில் என்பதை மேற்கு மாவட்ட மக்கள் நிரூபித்து வருகிறார்கள்
    ஒரு தொழிற்சாலையை நடத்துபவர், வளகத்திலேயே தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்கிறார். அல்லது அருகாமையில் வசித்துக் கொண்டு தொழிற்சாலையில் குறைந்தது 12 மணி நேரம் செலவிடுகிறார். அதுவே வேளாண்மைக்கும் பொருந்தும். வேளாண்மையையும் ஒரு தொழிற்சாலையாக கருதி முனைப்புடன் செயல்படும்போது, அது தொழிற்சாலையைவிட கணிசமான லாபத்தையும், பன்மடங்கு மன நிம்மதியையைும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் தருவதுடன், நமது பாரம்பரியம், கலாசாரம், பண்பாடு அத்தனையும் பேணிக் காக்கவும், அடிப்படையாக அமைகிறது என்பதும் நிதரிசனமான உண்மை. தமிழக விவசாயிகளுக்கு நிலம் என்பது வெறும் மண் அல்லை. அது அவர்களின் வாழ்க்கை
                                                                   ---- த.தேவராஜ்
-------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக