ஞாயிறு, 12 ஜூலை, 2015

பறிக்கப்படும் பாதசாரிகள் உரிமை: எல்லா சாலைகளிலும் கடைகளால் ஆக்கிரமிப்பு, கேபிள் பதிப்பு, குடிநீர் குழாய்கள் பதிப்பு என பாதசாரிகளின் உரிமைகள்தான் பறிக்கப்படுகிறது.

  பறிக்கப்படும் பாதசாரிகளின் உரிமை


    சாலை விபத்துக்கள் உலகெங்கும் மிகப்பெரிய பிரச்சினையாகவே உள்ளது. விபத்திற்கு முன் மிகுந்த உடல்தகுதியுடன் இருந்த நபர்கள் விபத்துக்குப்பின் தங்கள் வாழ்க்கையே இழந்து விடுகிறார்கள்.
   உலக சுகாதார அமைப்பின் (WHO) தகவல்படி உலகில் 12 லட்சத்திற்கும் அதிகமானோர் ஆண்டு தோறும் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். 6 கோடிக்கும் அதிகமானோர் கொடுங்காயம் அடைகின்றனர். சாலை விபத்துக்களில் இறப்போரில் 10 முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்களே அதிகம் என்றும், புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனஇந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில்தான் சாலை விபத்துக்கள் மிகஅதிகம்.
  இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் சாலை விபத்துகள் மிகஅதிகம். சாலை விபத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அதிகம். ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் ஒரு சாலை விபத்து நடக்கிறது. ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் 3 பேர் சாலை விபத்தில் கொல்லப் படுகின்றனர்.
  2013 ல் தமிழகத்தில் பதிவான 14,504 விபத்துகளில் 15,563 இறந்தனர். கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த  4,715 சாலை விபத்துக்களில் 6,513 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர், 44,158 விபத்துக்களில் 69,168 பேர் சிறு காயம் அடைந்து உள்ளனர். 2002 முதல் 2012 வரை, மிகவும் கூடுதலான விபத்துக்கள் நிகழ்ந்துள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது.
  கடந்த 2010-ஆம் ஆண்டில் தமிழகத்தில் 1.32 கோடி வாகனங்கள் வரை பதிவு செய்யப் பட்டிருந்தன. கடந்த 2014 ம் ஆண்டில் 1.99 கோடி வாகனங்கள் வரை பதிவு செய்யப் பட்டிருந்தன. இவ்வளவு வாகன எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழகச் சாலைகளின் தரம் உள்ளதா? சாலை விபத்துகளில் அதிகம் பாதிக்கப்படும்  பாதசாரிகள் உள்ளிட்ட அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் சாலைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றவா?   விபத்துக்களுக்கு முக்கிய காரணங்கள்தான் என்ன:
  வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளின் தரம் இல்லாமை, அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் சாலைகள் அமைக்கப் படாமைவாகன ஓட்டிகள் செல்போன் பயன்படுத்துவது, சாலை விதிகளை கடைபிடிக்காமை, அதிவேகம், தங்கள் வாகனத்தின் தன்மையை அறியாமல் ஓட்டுவது, பொது வாகனங்களில் அதிக பயணிகளை ஏற்றுதல், மிகுந்த ஆணவத்துடன் வாகனங்களை அதிவேகத்தில் ஓட்டுவது என பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது
  வாகன ஓட்டிகளின் தவறுகளுக்கு தண்டனைகளை அதிகரிப்பதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமே தீர்வாக அமையும்ஆனால் அனைத்து வகைப் பயணிகளுக்கும் சாலைகளில் அவர்களுக்கான உரிமையை பகிர்ந்தளிப்பது, பாதசாரிகளுக்கு போதிய அகலம் கொண்ட நடைபாதைகள் அமைப்பது போன்றவற்றால் மட்டுமே விபத்துக்களின் எணிக்கையை பாதியாகக் குறைக்க முடியும் என்கிறார்கள் வல்லுநர்கள். பாதசாரிகளுக்கும், இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் பல சாலைகளில் அவர்களின் உரிமை பறிக்கப் படுகிறது. இதனால் அவர்கள் வேறு வழியின்றி, 4 சக்கர வாகனங்களுக்கான பகுதிகளுக்குள் வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு அதுவே விபத்துகளுக்கு பிரதான காரணமாக அமைகிறது.
  தமிழகத்தில் உண்மையில் நடப்பது என்ன? பாதசாரிகள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உரிமைகள் வெகுவாகப புறக்கணிக்கப் படுகிறது. பாதசாரிகளை அரசாங்கம் இந்த நாட்டின் குடிமகனாகவே மதிக்கப்பது இல்லைபாதசாரிகளின் இடங்கள்தான், நடைபாதை வியாபாரிகளாலும் வணிக நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப் படுகிறது. குழாய்கள், கேபிள்கள் பதிப்பதற்கும் பறிக்கப் படுகிறது. குப்பைகள், கட்டட இடிபாடிகள், சாலை அமைக்க பயன்படுத்தியதும் பொருள், பாதசாரிகளுக்கான நடை பாதைகளில் தான் கொட்டிக் குவிக்கப் படுகிறது.
  இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தார்ப்போல் அண்மையில் கடலூர் ரயில்வே மேம்பாலம் மற்றும் அதன் இணைப்புச் சாலைகளில், போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்கான கோடுகளை வரைந்ததில், பாதசாரிகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள். பாதசாரிகளுக்கு இடமே ஒதுக்காமல் கோடுகளை வரைந்து உள்ளனர். இதன் மூலம் பாதசாரிகள் அவமதிக்கப் படுகிறார்களோ என்ற எண்ணம் பொதுமக்கள் மனதில் உருவாகி இருக்கிறது. சாலை முழுவதையும்  4 சக்கர வாகனங்களுக்காகவே ஒதுக்கி விட்டால் பாதசாரிகளும் இரு சக்கர வாகன ஓட்டிகளும் எங்கு செல்வார்கள்? எண்ணிப் பார்க்குமா சம்பந்தப்பட்ட துறைகள்?                                                                                                                            -- த.தேவராஜ்
---------------------
 

வெள்ளி, 10 ஜூலை, 2015

காவிரியே ஏன் வரண்டாய்?

  காவிரியே ஏன் வரண்டாய்? 


காடுகளில் தனித்தனியே அலைந்து திரிந்த மனித இனம் கூட்டாக வாழத் தொடங்கி நதிகளின் சமவெளிகளில் வாழத் தொடங்கினான். மிகப் பழைமை வாய்ந்த திராவிடக் கலாசாரம் என்று, அண்மையில் உறுதி செய்யப்பட்ட சிந்து சமவெளி நாகரீகம் முதல், அனைத்து நதிகளின் சமவெளிகளிலும் நாகரீக மனிதன் வாழ்ந்து, விவசாயத்தை தலையாக தொழிலாக மேற்கொண்டான்.
  அணைகள் கட்டப்படாத காலத்தில் நேரடியாக வாய்க்கால்கள் மூலமாகத்தான் மனிதன் விவசாயம்செய்து இருக்க முடியும். அந்த வகையில் காவிரியை ஆதிகாலம் தொட்டு முழுமையாக பயன்படுத்திக் கொண்டவன் தமிழனாகத்தான் இருக்க முடியும். காவிரி ஆற்றுக்கு நீண்ட சமவெளிப் பகுதி தமிழகத்துக்குத்தான் அதிகம் உண்டு. அணை கட்டி தண்ணீரை தேக்கி வைத்து விவசாயம் மேற்கொண்ட பின்னர்தான் கர்நாடகப் பகுதியில் காவிரி விவசாயமே தோன்றி இருக்க முடியும்.
  அதற்கும் முன்னோடியாக 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சோழவள நாட்டில்  கரிகால் சோழன் கல்லணை கட்டிய  பிறகுதான் அந்த மாற்று விவசாய சிந்தனையே கர்நாகத்துக்கு வந்து இருக்க முடியும். சமஸ்தான ஆட்சி முறையால் இந்தியா பல 100 நாடுகளாகப் பிரிந்து கிடந்த காலத்தில் எத்தனையோ சமஸ்தானங்கள் குட்டி குட்டி நாடுகள் வழிகத்தான் காவிரி பாய்ந்தோடி இருக்க முடியும். அப்போதும் சோழ வள நாடுதான் காவிரியை முழுமையாகப் பயன்படுத்திய பெரிய நாடாக இருக்க முடியும். பல காலங்களில் பல எல்லைகளை கடந்து வந்த காவிரி இன்று 4 மாநில பிரச்சினையாக இருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் இதே எல்லைகள்தான் என்று முடிவாகச் சொல்லி விடமுடியாது.
  இவற்றை பகுத்தறிந்து பார்க்கும் நிலையில் காவிரியில் அதிக உரிமை கொண்ட தமிழ் நாட்டுக்கு, காவிரியை பாலைவனமாக மாற்ற முனைவது தமிழனுக்கு இழைக்கப்படும் எத்தனை கொடுமை?  காவிரியின் தலைவன் (கணவன்) சோழ மன்னன் என்று சங்க இலக்கியம் தொடங்கி பல்வேறு தமிழ் இலக்கியப் பதிவுகளும் குறிப்பிடுகின்றன. காவிரியின் தலைவன் கர்நாடக நவாப் என்றோ அவருக்கு முந்திய கர்நாடகப் பகுதி மன்னன் என்றோ… வரலாறோ இலக்கியமோ இல்லை.
  இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன் சிலப்பதிகாரம் செய்த இளங்கோவடிகள் காவிரியைப் பாடியபோது, அந்தக் காவிரி எத்தனை அழகாக எத்தனை ஆழ அகலம் கொண்டதாக எத்தனை அர்த்தம் கொண்டதாக பாடி இருக்கிறார். 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இளங்கோவடிகளின் கருத்தை, காவிரியின் தலைவன் சோழமன்னன் என்ற ஆழமான அழுத்தமான கருத்தை அப்போதே கர்நாடகம் எதிர்த்திருக்க வேண்டும். எதிர்க்காத காரணம் அவர்களுக்கு அப்போது காவிரி பயன்பட்டதில்லை என்றுதான் சொல்ல முடியும். தனது மாநிலம் வழியாகப் பாய்ந்தோடிய நதியை பயன்படுத்தத் தெரியாத இயலாமையில் இருந்தவன், இன்று வந்து சொந்தம் கொண்டாடுவதுதான் வியப்பான விஷயம்.
  சிலப்பதிகார வரிகள் இதோ:
      மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
      கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி!
      கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின் கணவன்
      திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி
  கரைகள் எங்கும் வண்டினங்கள் ரீங்காரமிட... சோலைகளில் இருந்த உதிர்ந்த பூக்களை ஆடையென அழகாக போர்த்தி.... கயல் மீன்களே கண்களாக சிமிட்டிக் கொண்டு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்த காவிரி.... இப்படி வறண்டு கிடக்கிறாளே.....!   
   ஒரு வேளை அதே பாடலில் இளங்கோவடிகள் கூறியதுபோல், காவிரியின் கணவனாக வர்ணிக்கப்படும் சோழமன்னன், செங்கோல் வளையாமல் நீதி நெறியுடன் ஆட்சி நடத்தியதால்தான் காவிரி இவ்வாறு அழகாக நடக்கிறாளாம்..... ஒரு வேளை இன்றைய ஆட்சியாளர்கள் நீதிநெறி தவறியதால்தான் காவிரி ஆறு வறண்டபோயிற்றோ? 
                                                         ---த.தேவராஜ்.


Top of Form
--------------------------------------------

Bottom of Form


வியாழன், 9 ஜூலை, 2015

கம்பீரமும் கவுரவமும் தந்த கலைக் கூடம் கடலூர் ஆட்சியர் அலுவலகம்.

   கம்பீரமும்  கவுரவமும்
தந்த  கலைக் கூடம்



 கடலூர்
 எத்தனை கோடி செலவிட்டு புதிய கட்டடம் கட்டினாலும்  100 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்துக்கு இணையாகப் போவதில்லை என்பதற்கு சாட்சி, கடலூர் மாவட்ட ஆட்சியரின் தற்போதைய அலுவலகம்தான்.
  தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்துக் கட்டடத்தில் இருந்து பெயர்ந்து, புதிய கட்டடத்தில் விரைவில் குடியேறப் போகிறது
   என்பது  தவிர்க்க முடியாது.



  செம்மை நிறத்தில் கம்பீரமாக் காட்சி தரும் தற்போதைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 100 ஆண்டுகளுக்கு முன் கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு, கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலகமாக இருந்ததாக வரலாறு கூறுகிறது. அதன்முன் விரிந்து கிடக்கும் மஞ்சக்குப்பம் மைதானம், புல்வெளி போர்த்திய  மிகப்பெரிய காோல்ப் மைதானமாக இருந்தது, இப்போது இந்தியர்களின் கண்பட்டு களையிழந்து காட்சி அளிக்கிறது.
    ஒரு குளிர் காலத்தில் மிளகு விலை திடீரென உயர்ந்து விட்டதால் அதிர்ந்து போன ஐரோப்பியர்கள், மிளகுக்காக அராபிய இடைத் தரகர்களை இனி நம்பினால், விலையேற்றத்தை சந்திக்க இயலாது என்று உணர்ந்தனர். விளைவு ஐரோப்பிய வணிகர்களால் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கப் பட்டது.
  இந்திய துணைக் கண்டம் கண்டு பிடிக்கப்பட்டு கிழக்கிந்திய கம்பெனி வணிகத்துக்காக இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆங்கிலேயர்களின் முதல் தலைமையகம் கடலூர் என்கிறது வரலாறு. அதுவே ஆங்கிலேய அரசுக்கு இந்தியா அடிமையாகக் காரணமாகவும் அமைந்தது. வணிகமே ஒரு நாட்டை அடிமைப் படுத்த காரணமாயிற்று. இன்றும் உலகமயம் ஆக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவுக்குள் வணிகத்தின் பெயரால் எல்லா நாடுகளும் நுழைந்து கொண்டுதான் இருக்கின்றன. அது வேறு விஷயம்.
   தொன்மை வாய்ந்த பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைத்தே புதிய ஆட்சியர் அலுவலகத்தை கட்டலாம் என்ற ஆலோசனை எடுபடாமல் போயிற்று. தற்போதைய தொன்மை வாய்ந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எத்தனையோ அரசியல் முடிவுகளுக்கு களமாய் இருந்து இருக்கும். பல வரலாற்று நாயகர்கள் ஆட்சியர்களாக இக்கட்டடத்தை அலங்கரித்தும் இருக்கிறார்கள்.
   இக்கட்டடம் கம்பீரத்தில் மட்டுமன்றி, காற்றோட்டத்துக்கும் பஞ்சம் இல்லாதது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் மின்விசிறி இன்றியே இதில் குளுமையான சூழலில் பணியாற்ற முடியும். அழகாக வடிவமைத்து நேர்த்தியாக சுடப்பட்ட செங்கலும் சுண்ணாம்பும் கொண்டு கட்டடப்பட்ட இக்கட்டடத்தின் உறுதித் தன்மைக்கு, வேறெந்த கட்டடமும் இணையாக இருக்க முடியாது.
   இன்றைய செங்கற்கள் கட்டும்போதே கரைந்து விடும் நிலையில், சில இடங்களில் கழிப்பறைகளைக் கட்டி, முறையான கட்டுமானமும் பராமரிப்பும் இல்லாததால் கசிந்த நீரால் வீணான செங்கற்கள் தவிர, வேறெந்த செங்கலும் 100 ஆண்டுகள் ஆகியும் பழுதடையாமல் இருப்பது மிகவும் வியப்பான விஷயம் ஆகும்
   400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் கிளைவ் வாழ்ந்த பங்களா, ஆட்சியரின் முகாம் அலுவலக அந்தஸ்தை பெற்று, அதுவே நிரந்தர ஆட்சியர் அலுவலகமாகவும் மாறிவிட்டது. தொன்மை வாய்ந்த ஆட்சியர் அலுவலகம் தேர்தல் காலங்களில் மட்டுமே ஆட்சியர்கள் அமர்ந்து பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது வேதனை தரும் விஷயம்தான்.
    இதில் அமர்ந்து பணியாற்றுவதில் நிச்சயம் வரலாற்றுத் தொன்மையுடன், தர்பார் போன்ற அரசவை கம்பீரமும் இணைந்து இருப்பதை, வேறெந்த கட்டடத்திலும் ஆட்சியர்கள் அனுபவிக்க வாய்ப்பில்லை என்று பல முன்னாள்  ஆட்சியர்கள் தெரிவித்த கருத்தை, இங்குள்ள செங்கற்கள் எதிரொலிப்பதை பலர் உணர்ந்து இருக்கிறார்கள்.
   பெண்ணை ஆற்றங்கரையில் கட்டப்பட்டு இருக்கும் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தில் குடியேறப்போவது ஆட்சியர்களின் கடமையாயிற்று. ஏதோ ஒரு குளிர்சாதனப் பெட்டிக்கான டி.வி  விளம்பரத்தில், "தற்போது நம்மிடம் இருக்கும் குளிர்சாதனப் பெட்டி நன்றாகத்தானே இருக்கிறது" என்று தந்தை கூற,  "ஸ்மாட்டாக இல்லையே" என்று மகன் கூறும் காட்சிதான் இங்கே நினைவுக்கு வருகிறது நமக்கு.
   மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும்போது கட்டடப் பராரிப்புக்கு கூடுதல் வாய்ப்பும், கூடுதல் நிதி ஒதுக்கீடும் இருக்கும். இக்கட்டடம் வேறு அலுவலகங்களாக மாறும்போது அதே கவனிப்பும், அதே பராமரிப்புப் பணிகளும் தொடருமாஎன்ற கேள்வியும் எழாமல் இல்லை. தொன்மை வாய்ந்த இக்கட்டடத்தை எப்போதும் போல் சிறப்பாக பராமரிப்பதுதான் ஒரு ஆட்சியின் கடமையாக இருக்கும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.
                                                                  ----- த.தேவராஜ்.

----------------- 

செவ்வாய், 7 ஜூலை, 2015

பகல் கொள்ளையாகும் சுங்கக் கட்டண வசூல்

              
         பகல் கொள்ளையாகும்
    சுங்கக் கட்டண வசூல்
 கடலூர்:
    சுங்கம் வசூலிப்பது என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் இருந்து வருகிறது. இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளாக  சமஸ்தானங்களாக இருந்த காலத்தில் ஒரு பகுதியில் இருந்து மற்ற பகுதிக்குச் செல்ல சுங்கம் வசூலிக்கப் பட்டது உண்மைதான். ஆனால் "யாதும் ஊரே யாவரும் கேளிர்என்ற சங்ககாலப் பாடலை பெருமையுடன் சொல்லிக் கொண்டு, இக்காலத்தில் சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கே சுங்கம் வசூலிக்கப் படுகிறது. தமிழ் நாட்டில் கி.பி.1070 முதல் 1120 வரை ஆட்சி புரிந்த முதலாம் குலோத்துங்க சோழன் நிலவரி தவிர்ந்த ஏனைய வரிகள் அனைத்தையும் ரத்து செய்ததால், "சுங்கம் தவிர்த்த சோழன்" என்று பெயர் பெற்றான். சுங்கமோ வரியோ மக்களுக்கு பெரும் சுமைதான், எனவே அவைகள் ரத்து செய்யப் படும்போது மக்கள் அடையும் ஆனந்தத்தை சுட்டிக் காட்டுவது தான், குலோத்துங்க சோழனுக்கு கிடைத்த இந்த விருது.
   இந்தியாவில் இன்று வரி வசூல், சுங்கம் வசூல் போன்றவை கணக்கில் அடங்காதவை. இன்னும் என்ன வரி வசூலிக்கலாம் என்ற ஆய்விலேயே அரசுகள் மூழ்கி இருக்கின்றன. வரி வசூலிப்பதில் தவறு இல்லை ஆனால் வசூலிக்கப்படும் வரி எதற்காக பயன்படுகிறது, எவ்வாறு செலவிடப் படுகிறது  என்பதுதான் கேள்வி. ஆனால் அதற்குத்தான் சரியான நியாயமான பதில் இல்லை.
   இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 263 சங்கச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 40 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் 18 ம் தனியார் கட்டுப்பாட்டில் 21 ம் உள்ளன. ஒவ்வொன்றிலும் மாறுபட்ட கட்டணங்கள் வசூலிக்கப் படுகின்றன
 பொதுத்துறை மற்றும் தனியார் துறை கூட்டு முயற்சியில் சாலைகள் போடப்பட்டு பராமரிப்பும் செய்வதாகக்கூறி சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணங்கள் அடிக்கடி உயர்த்தப் படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். இவ்வளவு கட்டணம் வசூலித்தும் அதை வைத்து சாலை பராமரிப்பு முறையாக நடப்பது இல்லை என்று மக்கள் புகார் தெரிவிக் கின்றனர். பல சுங்கச் சாவடிகளில் அடியாட்களை வைத்து வசூலிக்கிறார்கள். இவற்றில் பணிபுரிவோர் 90 சதம் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. தமிழ்நாட்டுச் சாலைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்  சுங்கம் வசூலித்து, அதன் மூலம் தமிழனுக்கு வேலை வாய்ப்புகூட இல்லை என்ற நிலை பரிதாபகரமானது.
   சாலைகள் போட்டு 10 முதல் 15 ஆண்டுகள் வரையில் கட்டணம் வசூல் செய்யலாம் என்று ஒப்பந்தத்தில் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் எதிலும் சுங்கம் நிறுத்தப்பட வில்லை.வசூல் வேட்டை தொடர்கிறது. மேலும் கட்டண வசூலில் வெளிப்படைத் தன்மையும் இல்லை. சீனாவிலும் சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. ஆனால் அவற்றில் கட்டணம் எப்போது முதல் வசூலிக்கப் படுகிறது. எந்தத் தேதி வரை வசூலிக்கப்படும். இதுவரை வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு போன்ற பல்வேறு விவரங்கள் வெளியிடப் படுகிறது.
 தொடக்கத்தில் 40 கி.மீதூரத்திற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப் பட்டது. இப்போது ரூ.70 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. சில சுங்கச் சாவடிகளில் ரூ.150 வரைகூட வசூலிக்கப் படுகிறது. தமிழகத்தில் 18 சுங்கச் சாவடிகள் உள்பட இந்தியா முழுவதும் சுங்கச் சாவடிகள் அனைத்திலும் ஏப்ரல் 1 முதல் 5 முதல் 13 சதம் வரை கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, லாரி உரிமையாளர் சம்மேளன நிர்வாகிகள் முற்றுகை போராட்டம் அறிவித்து உள்ளனர்.
   சுங்கச் சாவடிகளுக்கான நிபந்தனைகளில், வாகன எண்ணிக்கை அதிகமாகும் பொழுது அதன் அடிப்படையில், சுங்க கட்டணம் குறைக்க வேண்டும். ஆனால் ஆண்டு தோறும் கட்டணத்தை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள்தமிழகத்தில் உள்ள ஒரு சாலை ரூ. 257 கோடியில் அமைக்கப்பட்டு, 19 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் கட்டணம் வசூலிக்கப் படுகிறது. செங்கல்பட்டு அருகே ஒரு சுங்கச் சாவடியில் மட்டும் 2010 வரை ரூ. 2,500 கோடி வசூலிக்கப் பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியா முழுவதும் உள்ள 263 சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ரூ. 5,400 கோடி வரை கட்டணம் மறைக்கப் படுவதாகவும் புகார்கள் எழுந்து உள்ளன.

  "ஒரு வாகனம் விற்பனையாகி சாலையில் ஓடத் தொடங்கும்போதே அவற்றுக்கு சாலை வரி செலுத்தப்பட்டு விடுகிறது.  2013–ம் ஆண்டு மத்திய அரசும் சுங்க கட்டணம் உயர்வு குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்தது. அந்த குழுவும் தனது அறிக்கையை மத்திய அரசிடம் கடந்த ஆண்டே சமர்ப்பித்தது. எனினும் அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் சுங்க கட்டணம் நிர்ணயம் செய்யாமல், வசூலிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான சுங்க கட்டணம் நிர்ணயம் செய்து ஆண்டுக்கு ஒருமுறை செலுத்தும் முறையை அமுல்படுத்த வேண்டும்" என்கிறார்கள் லாரி உரிமையாளர்கள்.