வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

பூரண மதுவிலக்கு சாத்தியமா?

பூரண மதுவிலக்கு சாத்தியமா?
 
      சுதந்திர இந்தியாவுக்கு முன்னரே தமிழகத்தில் மதுவிலக்கு அமலில் இருந்தது. 1944ல் மதுவிலக்கை ரத்து செய்து ஆங்கிலேய அரசு கள்ளுக் கடைகளை திறந்தது. சுதந்திரம் அடைந்த பிறகு மீண்டும் மதுவிலக்கு அமலானது. கள் என்பது உடல்நலனுக்கு உகந்த பானமாக கருதப் பட்டது. இதனால்தான் தென் மாவட்டங்களில் Half ana toddy soften a body என்ற பழமொழி ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தது. 100 சதம் மதுவிலக்கு என்பது சாத்தியமானதே இல்லை என்றுதான் நடுநிலையாளர்கள் பலரும் கூறுகிறார்கள். இப்போதும்கூட மதுவிலக்குக்கு எதிரான போராட்டம் வெடித்த நிலையில் மதுவிற்பனை அமோகமாகத்தான் நடந்து இருக்கிறது.
  1967ல் தி.மு.. ஆட்சிக்கு வந்தவுடன் அரசு வருவாயைப் பெருக்க மதுக்கடைகளை திறக்க வேண்டும் என்று அதிகாரிகள் பரிந்துரைத்தும், முதல்வர் அண்ணா ஏற்கவில்லை. 1971 வரை இந்தியாவில் குஜராத்தும் தமிழகமும்தான் மதுவிலக்கை அமல்படுத்தின.
  மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு மாநியம் என்று அறிவித்த மத்திய அரசு, அதில் இருந்து பின்வாங்கிக் கொண்டதால் மீண்டும் மதுக் கடைகளை திறக்க நேர்ந்ததாக அப்போதைய முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். அதன் பிறகு மதுக்கடைகளை மூடுவதும் திறப்பதும் மாறிமாறி கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆட்சி காலங்களில் நடந்து இருக்கிறது.
  இதில் மதுவிலக்கை மாநில அரசுகளின் பட்டியலில் ஒதுக்கி, மத்திய அரசு தப்பித்துக் கொண்டு உள்ளது. தேசப்பிதா காந்தியின் கொள்கையை நிறைவேற்ற வேண்டுமானால் அது, மத்திய அரசின் பட்டியலில் இருப்பதுதானே நியாயம். எனவே இந்தியா முழுவதும் மதுவிலக்கு என்றால்தான்  உண்மையான மதுவிலக்காக இருக்க முடியும். அது சாத்தியமா
   மதுக்கடைகளை தனியாருக்கு விட்டதில் நிகழ்ந்த குழப்பங்கள், முறைகேடுகள், அரசுக்கு நேர்ந்த வருவாய் இழப்புகள் காரணமாகவே  மதுக் கடைகளை அரசு ஏற்று நடத்தியது. ஆனால் தாராளமாக பார்களும் திறக்கப் பட்டதுதான் மது அருந்துவோர் எண்ணிக்கை பெருகக் காரணமாகி வி்ட்டது.
 தமிழகத்தில் தற்போது 6800 மதுக்கடைகள் உள்ளன. பல மதுக்கடைகளுடன் பார்கள் உள்ளன. தமிழகத்தில் பள்ளிகள் எண்ணிக்கை 4200. பள்ளிகளுக்கு அருகே 1200 டாஸ்மாக் கடைகள் இருப்பதாக மாணவர் அமைப்புகள் தெரிவிக்கின்றன. மதுக்கடைகள் மூலம் ரூ. 30 ஆயிரம் கோடி வரை வருவாய் வருவதாகச் சொல்கிறார்கள்.  
  இது தமிழக அரசின் வருவாயில் 27 சதம் என்று கூறப்படுகிறது. மதுக்கடை பணிகளில் சுமார் 50 ஆயிரம் பேர் உள்ளனர். அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி வருவாய் என்பது ஒருபுறம் இருக்க, பார்களில் குவாட்ருக்கு ரூ. 5 கூடுதல் விலை, 40 காசு பிளாஸ்டிக் டம்ளர் விலை  ரூ.7 வரைபோலி குடிநீர் பாட்டில் விலை ரூ. 25, தின்பண்டங்களின் விலை சந்தை விலையை விட பன்மடங்கு அதிகம். இந்த வகையில் சுமார் ரூ. 50 ஆயிரம் கோடி வரை புரளுகிறது என்கிறார்கள் சிலர்.
  நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மதுவிலக்கை அமல் படுத்துவதில் தள்ளாடிய நிலையில், இப்போது 100 சதம் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமா? டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு மதுவிலக்கை அமல் படுத்தினாலும், ஸ்டார் ஹோட்டல்களில் மது விற்பனையும் பார் வசதியும் இருக்கத்தான் போகிறது. சுற்றுலா விடுதிகளில் மது விற்பனை செய்தே ஆக வேண்டும்.
  ஆன் லைன் வர்த்தகம் வளர்ந்து வரும் நிலையில் மது விலக்கை அமல் படுத்தினாலும், மது பாட்டில்களை ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாமே.
அப்படி ஒரு நிலை வரும்போது வசதி படைத்தவர்கள் எல்லாம் மது குடிக்கலாம். ஏழைகள் குடிக்க கூடாதா? என்ற விவாதம் எழுந்து விடும்.
   மது விலக்கு அமலில் இருந்த காலங்களில் எல்லாம் கள்ளச்சாராயம் கட்டுப்படுத்தப் படாமல் பெருக்கெடுத்து ஓடியதுதான் வரலாறு. மதுவிலக்கு என்பது காவல்துறைக்கும், பல அரசியல் வாதிகளுக்கும்தான் சாதகம் என்ற கருத்தும் மறுக்க முடியாதது. மதுவிலக்கு அமலில் இருந்தபோது கடலூர் மாவட்டத்தில் கள்ளச் சாராயத்தை கடுமையாக கட்டுப் படுத்திய போலீஸ் அதிகாரி ஒருவரை, பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு கள்ளச் சாராய வியாபாரி ஒருவர், புதுவையில் இருந்து விஷ சாராயத்தை பண்ருட்டி அருகே விற்று 50 பேர் இறந்தனர்நூற்றுக்கும் மேற்பட்டோர் பார்வை இழந்தனர்.
  கள்ளச் சாராயத்தை கடுமையாக அமல்படுத்திய அந்த போலீஸ் அதிகாரியை அரசு ஒன்றும் பாராட்டி கௌரவிக்க வில்லை. கள்ளச் சாராயத்தால் கோடீஸ்வரர்களாகி, அத்தொழிலை காப்பாற்ற அரசியலுக்குள் நுழைந்து பதவிகளைப் பெற்றவர்களும் உண்டு. அப்படிப்பட்ட பலரும் அரசியல் பிரமுகர்களாக வலம்வந்து கொண்டு இருந்த காலமும் இருந்தது. தமிழக  அரசியல் சீர்கெட்டுப் போனதற்கு கள்ளச் சாராயமும் ஒரு காரணம் என்பதை நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்வர்
   மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத் மாநிலத்தில்தான் கள்ளச் சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது என்கிறார்கள். அவ்வப்போது பலர் கள்ளச் சாராயத்துக்கு பலியாகிறார்கள். மதுவிலக்கு அமலில் இருந்தபோது தமிழகத்திலும் இதே நிலை இருந்தது. பல அரசியல் வாதிகள், சில அரசியல் கட்சிகளின் வருமானமே கள்ளச் சாராயமாகத்தான் இருந்தது. மதுவிலக்கு அமல் பிரிவில் பணிபுரிய, லட்சக் கணக்கில் பணம் கொடுக்க முன் வந்த போலீஸ் அதிகாரிகளையும் பார்த்து இருக்கிறது தமிழகம்.
  அளவோடு மதுக்கடைகளை மட்டும் திறந்து இருந்தால் தமிழ்நாட்டில் மது பிரச்சினை இந்த அளவுக்கு வளர்ந்து இருக்காது. மது அருந்தும் கூடங்களை தாராளமாக திறந்ததுதான் சிறுவர் முதல் முதியோர் வரை தாரளமாக குடிக்க வசதியாய் போய்விட்டதுஇப்போதும் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைத்து, பார்களை மூடிவிட்டு, பொது இடத்தில் மது அருந்தியவர்களை கடுமையாகத் தண்டித்தாலே மதுப் பிரச்சினை பாதியாகக் குறைந்து விடும். முதல் கட்டமாக பார்களை மட்டும் மூடலாமே

  தமிழகத்தில் மதுவிலக்கை அமல் படுத்தக்கோரி போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது. ஆட்சிக்கும் ஆளும் கட்சிக்கும் எதிரான போராட்டமாக இன்று சித்திரிக்கப் பட்டாலும் முன்னிலைப் படுத்தப்பட்டாலும், பொதுத் தேர்தலில் இதனால் சாதகம் ஆளும் கட்சிக்கா? எதிக்கட்சிகளுக்கா? என்பது போகப் போகத்தான் தெரியும். பின்னணியில் அரசியல் சித்து விளையாட்டும் இருப்பதாகவே நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள்.  

1 கருத்து:

  1. Better way is to bring a production control on manufacturing alcohol.... rather than wasting energy.... do not meet the demand, always supply low and increase the cost. For the money they can afford let them drink the quantity, If they have enough money to spend on drinking and still be addicted let them be. In no other country drinking alcohol could be a big problem like ours. We go to tame it through policies which are favorable to good citizens...

    பதிலளிநீக்கு